Friday, 2 October 2015

எதிரதாக் காக்கும் அறிவு

எட்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு. ஜியோகிரஃபி ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. வகுப்பில் பாடம் நடத்தும் போது ஆசிரியர் அழுத்தம் காட்டிய ‘சூயஸ் கால்வாய்’, ‘பனாமா கால்வாய்’ இரண்டு பத்து மதிப்பெண்களை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். இந்த ரெண்டு கேள்விய வெச்சு எப்படியாவது ஆறு பக்கம் நிரப்பிட்டா 17 எடுத்தரலாம். மேப்-ல 10. அப்புறம் சூஸ் தி பெஸ்ட்-ல... சே! இப்போதைக்கு கால்வாய் தான் முக்கியம் – திரும்பத் திரும்ப நீளம், அகலம், ஆழம் என காதைப் பொத்தி, கண்ணை மூடி நினைவுகூர்ந்து கொண்டே இருந்தேன். சரிபார்க்க கண்களைத் திறந்த நொடியில்: தேர்வறையில் எனக்குப் பின்னிருக்கையில் அமரும் பிரவீன் என்னை குறுகுறுக்கப் பார்த்தான்.

‘என்னடா ரெண்டும் மூணாவது பாடம் கேள்வியாவே படிச்சு வெச்சிருக்கே! ரெண்டுல எதாவது ஒண்ணு தான்டா வரும். இல்ல வராமலே போகலாம். இன்னொண்ணு ஏழாவது பாடம் காடுல ஒண்ணாவது படிச்சிருக்கியா இல்லையா?’
‘ஐயோ! இல்ல டா...’
‘சரி, புதுசா படிச்சு கொழப்பிக்காம இதையே படி’
‘போச்சு, எல்லாம் போச்சு ! இது ரெண்டுமே வராம போய்ட்டா என்ன பண்றது? பத்து மார்க் கேள்விய நம்பித் தான்டா இருக்கேன். 2 மார்க்கும், 1 மார்க்கும் அப்போ கைக்கு வர்றது தான். இதுவும் இல்லைனா பேரன்ட்ஸ் மீட்டிங்க்ல இந்த தடவையும் தொலைச்சு எடுத்துருவாங்க! எதுக்கும் கண்டிப்பா வர்ற மாதிரி ஒரு கேள்வி சொல்லுடா... லைட்டா பாத்து வெச்சுக்கிறேன்’
‘சரி அமேசான் பத்தி பாத்துக்கோ. நான் அத மட்டும் தான் நம்பியிருக்கேன்’

பிரவீன் என்ன படித்தாலும் என்னை விட கம்மி மார்க் எடுப்பவன். அவன் பேச்சை நம்புறதா? இல்லை, இல்லை. அவன் ஹாஸ்டல்ல நைட் ஸ்டடி பண்றப்போ, பக்கத்து கிளாஸ்க்கு ஜியோகிரஃபி எடுக்குற தண்டபாணி சார் ஏதாவது இம்பார்டண்ட் கொஸ்டீன் சொல்லியிருப்பார். இல்லைனா, பிரவீன் அமேசான மட்டும் நம்பி இன்னிக்கு வந்திருக்க மாட்டான். பக்கங்கள் அமேசான் காட்டை நோக்கி படபடத்துக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு சூழலிலும், ‘தனக்கு வரப்போகும் சோதனை என்ன’, என்பதை யூகித்து யூகித்து தப்பித் தவறி, கரை ஏறியவர்களில் ஒருவன் நான். இந்த அறிவு வாழ்க்கையில் ஒரு நிலைக்கு உயரப் போதுமானதா? நமக்கு முன்பு உயர்ந்தவர்கள் எல்லோரும் இப்படித்தான் முன்னேறினார்களா? நாம் தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறோமோ ? எல்லாம் தெரிந்து வைத்திருந்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியுமா ? பள்ளிக் காலத் தேர்விற்கு முந்தைய நாள் இப்படியான கேள்விகளில் மனம் அலைபாய்ந்தது உண்டு.


கல்லூரியில், செய்முறைத் தேர்வுகளில் வைவா-வோஸ் என்று தனியாக 5 மதிப்பெண் ஒதுக்குவார்கள். முதலில் உள்ளே செல்பவர் தான் பலியாடு. வெளியே வந்தவுடன், ‘என்ன கேட்டாங்க ? என்ன கேட்டாங்க’ என்று ஒரு புடை சூழும் பாருங்கள்..! இந்த கதி வேலைக்கான நேர்முகத் தேர்வுகளிலும் தொடர்ந்தது என்பது தனி வேடிக்கை.
‘பழைய கேள்வித் தாள்கள்’ என்ற விஷயம் இல்லாவிட்டால் நம்மில் கல்லூரியில் அரியர் வைத்த பலர், பட்டம் பெறுவதற்குள் ரிடையர் ஆகி இருப்போம்.
திருவள்ளுவரே இதைத் தான் அறிவுடைமை-னு சொல்லியிருக்கார்: (இன்னும் ஒன்பது விஷயம் சொல்லியிருந்தாலும்,,,)

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். (குறள் 429 – அறிவுடைமை)

நான் படிப்பில் ஒரு சராசரி. ஒவ்வொரு நிலையிலும், ஏதேனும் ஒரு காரணத்தால், ஒரு பாடத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்திருக்கிறேன். போதுமான தருணங்களில், இந்த ‘காரண’ங்கள் அப்பாடம் கையாளும் ஆசிரியர்களின் கணிவு / பாடத்தில் அவர்க்கு (எனக்கு அல்ல, அவருக்கு!) இருக்கும் ஈடுபாடு / மாணவர் (என்) மீதான அக்கறை / எளிமையாக புரிய வைக்கும் திறன் போன்ற ஏதேனும் ஒன்றாக இருந்திருக்கின்றது. எப்பொழுதும் ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகியவை மட்டும் ஆர்வத்தைக் கிளறிக் கொண்டே இருந்தன. இந்தப் பாடங்களிலும் நீங்கள் எதிர்பார்ப்பது போல நூற்றுக்கு நூறு எல்லாம் வாங்கியதில்லை.

பத்தாம் வகுப்பில் அந்தப் பாடம் – கணிதமாக இருந்தது. ஆசிரியருக்கு என் மீது அசாதாரண நம்பிக்கை: நான் செண்டம் எடுத்து, வருடா வருடம் எங்கள் பள்ளி பரிசளித்து கௌரவிக்கும் ஒரு கிராம் தங்க நாணயத்தை அவர்க்கு வாங்கிக் கொடுப்பேன் என்று. கணித ஆசிரியர் ஒவ்வொரு பருவத் தேர்வின் போதும் எச்சரித்து வந்தார், “கொஞ்சம் கவனக் குறைவுகளைத் தவிர்த்துக் கொண்டால் கண்டிப்பாக செண்டம் எடுக்க வாய்ப்பிருக்கு. தவற விட்டு விடாதே. நினைவில் கொள் - 99 இஸ் நெவர் ஈக்வல் டூ செண்டம்!

ரிசல்ட் அன்று நான் வாங்கிய மதிப்பெண்களை ஆசிரியர்களிடம் காட்டி, பெருமை கொள்ள, பள்ளிக்குச் சென்றேன். அங்கே நூற்றுக்கு நூறு வாங்கிய ரம்யா-வைப் பாராட்டிக் கொண்டிருந்தார் கணித ஆசிரியர். சரி, நம்மையும் ‘வெல் ட்ரைட்’ ஆவது சொல்வார் என அருகில் நெருங்கினேன். வாங்கிப் பார்த்து விட்டு எரிச்சல் முகத்துடன் “எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன் - 99 இஸ் நெவர் ஈக்வல் டூ செண்டம் னு. இப்போ பார் ரெண்டு பேப்பர்-ல ஒண்ணுல கூட செண்டம் இல்ல. பேப்பர் ஒன்-ல 99, பேப்பர் டூ-ல 98. மியர் வேஸ்ட் ஆஃப் டைம் டீச்சிங் யூ”. என்னை மேலும் சிதைப்பதற்குள், இன்னொரு 199 வந்து விட்டான் என்னைக் காப்பாற்ற.

“எந்த கல்விக்கூடத்தாலும் எதைப் படிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க முடியாது. எப்படிப் படிக்க வேண்டும் என்று மட்டும் தான் கற்றுக் கொடுக்க முடியும்.”
– சுகி சிவம்

Thursday, 30 April 2015

அரைக்கோலப் புள்ளிகள்

அவள்
பெயர் தேவையில்லை
உங்கள் வகுப்பிலும் இப்படி ஒரு பெண் இருந்திருப்பாள். இருந்தாள் என்று நீங்கள் உணராமலே கூட உங்கள் கல்லூரி வாழ்க்கையை முடித்திருக்கக் கூடும். நண்பர்களுடன் உரையாடலின் போது, யதேச்சையாக அவளைப் பற்றிய பேச்சு வரும் போது அரை மணி நேரமோ, அரை நாளோ அவளது ஞாபகம் மனதைப் பற்றிக் கொண்டு துரத்தும்.

அவள் ஒரு வினோதம். எல்லோருக்கும் நல்லவளாய் தெரிபவள்!! எளிதில் எவருடனும் பேசிப் பழகிட மாட்டாள். ஆனால் அவளுக்கென ஒரு கூட்டம் உண்டு.


வகுப்பின் முன் வரிசையில் அமர்ந்து கொண்டு, தனக்கு மட்டும் தான் தெரியும் என்பது போல ஒவ்வொரு கேள்விக்கும் முந்திக் கொண்டு, கை தூக்கி பதில் அளிப்பவள் அல்ல அவள். ஆனால் அந்த முந்திரிக் கொட்டைகளுக்கு முன்பே பதில் கண்டுபிடித்து விட்டு அடுத்த கேள்விக்காக அமைதியாய் காத்திருப்பவள். 

என்ன தான் புரொஃபசர் பல புத்தகங்களை ஆராய்ந்து, முட்டி மோதி செமெஸ்டர்-க்கு இத்தனை என்ற வீதம் வகுப்புகள், ஸ்பெஷல் கோச்சிங் வகுப்புகள் எடுத்தாலும்,  தேர்வுக்கு முந்தைய நாள் அவள் சொல்லிக் கொடுத்த பாடத்திற்கு எதுவுமே நிகராகாது. தேர்வுக்கு முந்தைய கடைசி நேரங்களில் அலைபாயும் நம் மனதை சாந்தப் படுத்துபவள். புரியாத சூத்திரங்களைக் கூட மனதில் பசுமரத்தாணியாய் பதியும் படி சொல்லித் தந்தவள். தேர்வு முடிவுகள் பட்டியலில் மூன்றாவதோ, நான்காவதோ வாங்கி விட்டு, ‘தான் முன்னேறி இருக்கிறோமா’ என்று மட்டும் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்பவள்.


எந்த ஒரு வேலையை செய்யும் போதும் அதில் அவளுக்கு இருக்கும் ஆர்வம், ஈடுபாடு, துடிப்பு என்னை பிரம்மிக்க வைக்கும். ஒரு சிறிய ரெகார்ட் வேலை ஆகட்டும், கல்லூரி விழாக்களுக்கு அவள் அணியும் ஆடையாகட்டும், அவள் செய்த வேலை என்று அடையாளப்படுத்தும் வகையில் அதில் ஒரு முழுமை இருக்கும். அவள் பேச்சில் நுட்பமான கவனம், தேர்ந்த நடத்தை, ஆழ்ந்த சிந்தனை எப்பொழுதுமே பொதிந்திருக்கும். 


நிறைய பேருடைய ஆசைகளை பேச்சு வாக்கில் கேட்டிருந்தாலும், கல்லூரி சுற்றுலா ஒன்றின் போது, அவள் வெளிப்படுத்திய ஆசை வார்த்தைகள் இன்னும் ஞாபகம் இருக்கின்றன. சராசரி பெண்களுக்கானது போலத் தான் என்றாலும், வாழ்க்கையில் அவளுக்கென்று ஓர் ஆசை இருந்தது. படித்து முடித்து ஒரு வேலையில் சேர வேண்டும். தான் உழைத்தது என்று பெருமிதம் கொள்ள, எங்கள் படிப்பிற்கேற்ற வேலையில் சேர்ந்து தன்னால் முடியும் என்று நிரூபிக்க வேண்டும். தன்னால் சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். அந்த அனுபவம் கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடங்கள், அதன் . . .  என அவள் விவரிக்கும் போது கண்களில் மின்னியது அவளது நம்பிக்கை நட்சத்திரங்கள்.


தன்னை யாருக்கு நிரூபிக்கப் புறப்பட்டாள் என்று தெரியாது. அவளோடான பயணம் நான்கு வருடம். அதன் பிறகு என்ன ஆனாள் என்று தெரியாது.

குருவிகள் கொத்தி விளையாடிக் களித்திருந்த எங்கள் வீட்டு அஞ்சல் பெட்டி, குருவிகள் காணாமல் போனதிலிருந்து,  தனிமைப் பட்டு கண்டு கொள்ள ஆள் இன்றி வெறுமையைக் காதலித்துக் கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் அதனை ஆசுவாசப் படுத்துவது போல, ஒரு தபால் வந்தது.

அவளுடைய திருமண அழைப்பிதழ்.


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி. - குறள்  13 (வான் சிறப்பு)



Thursday, 22 January 2015

போதை

     கொஞ்சம் கொஞ்சமாய் இதற்கு அடிமைப்பட்டு வருகிறேன். கல்லூரியில் நெருங்கிய நண்பர்கள் சிலர் செய்கிறார்கள், நாமும் செய்து பார்ப்போமே என்று துவங்கியது. இப்பொழுதோ வாரத்தில் இரண்டை விழுங்கி விடுகிறேன். நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம், அதில் கிடைக்கும் ஆனந்தம், ஒரு வகை புத்துணர்ச்சி, எதையோ சாதித்து விட்டது போல் பேருவகை... தீரத்தீர, 'அடடா கடங்காரன் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கக் கூடாதா? அஞ்சு பத்து சேர்த்துக் கொடுத்தாலும் 'இந்த மாச ரேஷன் இவ்வளவு தான்' என்று, பசி ஏக்கப் பார்வையைப்  பற்றி கவலைப்படாமல், கன்றுக்குட்டியை இழுத்துக் கட்டிவிட்டு மடி காணாமல் போகும் அளவிற்கு கறந்து விடும் கறவனைப் போல, கல்லா கட்டி அடுத்த கஸ்டமரைப் பார்க்கச் செல்லும் கடைக்காரரை என்னவென்று நொந்து கொள்வது! அவருக்கு நம் ஆதங்கம் புரியவா போகிறது?

     
விதிக்கப்பட்ட இருபத்தெட்டு நாட்களுக்குள் தீர்க்க முடியாமல் அவதிப்பட்ட நாட்களும் உண்டு. மீண்டும் எப்பொழுது கிடைக்கும் என்று ஏங்கித் தவித்த நாட்களும் உண்டு.

வர வர, காரணம் என்று ஒன்று இல்லாமல் போய் விட்டது. நண்பர்கள் என்றில்லை... 

தெரிந்த முகங்கள், என்றோ ஒரு நாள் எங்கள் கல்லூரி விழாவிற்கு வந்திருந்த அசலூர் கூட்டத்தில் சகஜமாய் சிரித்துப் பேசிவிட்டு காணாமல் போனவன்(ள்)

என்றோ ஒரு நாள் உதவிய உள்ளம், பார்த்து ஏழெட்டு வருடங்களாகி விட்ட பள்ளித் தோழன், அவர்கள் பிறந்த நாள்

ஜெராக்ஸ் கடையில் முப்பது ரூபாய் செலவழிக்க யோசிக்கும் பக்கத்து வீட்டு பார்த்திபனுக்கு +2 ரிசல்ட் வந்து விட்டது

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், உறிக்கும் வெங்காயத்தின் அல்லிசினோடு தன் இயலாமையையும் சேர்த்து முடக்கி, கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த சித்ராவுக்கு வேலை கிடைத்து விட்ட நாளில் குழுவோடு சேர்ந்து கும்மியடித்திட, மறந்து போன இந்த போதையும் உயிர்த்தெழுந்தது.


இன்று யாருக்காக? என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்,

"இதயத்தை ஏதோ ஒன்று
 இழுக்குது கொஞ்சம் இன்று: 
 இதுவரை இதுபோலே நானும் இல்லையே" ... போன் சிணுங்கியது.





 
   "டேய் மச்சான் என்னடா பண்ற...?  WhatsApp வாடா! செம கூத்து நடக்குது"
என்று ஆர்வத்தைப் பெருக்கி விட்டு ஓடி விடும் நண்பேன்டாக்கள் இருக்கும் வரை என் 2G/3G/4G Data போதை எங்கே ஒழியப் போகிறது ?


இப்படி Suspense style-இலேயே எழுதிக் கொண்டிருப்பதும் ஒரு வகை போதை தானோ?

நன்றி: அஸ்வத், தாமரை, சின்மயி, ரஞ்சனி, ரேவதி, ராமச்சந்திரன்

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...