Wednesday, 14 September 2016

உறவுகள் சிறுகதை

உறவுகள் தொடர் சிறு கதை

மணி நள்ளிரவைத் தொட, இன்னும் சில மணித்துளிகள் இருந்தன. ‘நெருங்கிய சொந்தங்கள் போல் பழகிய நட்புகளை விட்டு தொலைவாலும் தொடர்பாலும் நெடுந்தூரம் வந்து விட்டோம்’, என்று அவ்வப்பொழுது நினைவு கூறும் நிமிடங்கள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று என்று அமைதியாய் கடக்கத் தான் தோன்றுகிறது. ஆனால், தொலைவைச் சுருக்கும் இந்த அலைபேசி அலறல்கள், மனதை ஆற விடுவதில்லை. அலறல்கள் துவங்கும் முன்பே, அலைபேசியை ஊமைப் படுத்தி விட்டாலும், வலிய வரும் தூக்கத்தை முனக வைக்கும் எண்ணம்: அவள், இன்று அழைப்பாளா?

அவள். சில்வண்டாய் சுற்றித் திரிந்தவள். கூரிய கண்களும், கொஞ்சம் திமிரும், கொஞ்சம் அறிவும், கொஞ்சம் வாயாடித்தனமும், மீச்சிறு அளவு அடக்கமும் சேர்ந்த ஒரு தனித்தன்மையான அழகு படைத்தவள். இருபாலர் பள்ளியில் தான் படித்தாளாம். எங்கள் ஊரிலிருந்து எப்படித் தான் இப்படி ஒருத்தி வந்து சேர்ந்தாளோ, எங்கள் வகுப்பில் ஐக்கியமானாள்.



கல்லூரி நண்பர்கள் கொஞ்சம் குறும்புக்காரர்கள். அவளை வம்புக்கிழுத்து வேடிக்கைப் பார்ப்பதில் ஆனந்தம் கொண்டார்கள். அவளும் சளைக்காமல் ஈடு கொடுத்து வாய் அளப்பாள். சிலர் வழிந்தொழுகினார்கள். ஒருவன் ஏதேதோ அழகெல்லாம் சொல்லி கவிதையாய் காதல் கிறுக்கினான். அதற்கெல்லாம் வசிபவளாகத் தெரியவில்லை.

எனக்கு அவள் தெளிவான சிந்தனை உடைய நல்ல தோழியாகவே தெரிந்தாள். நிறைவேறாத ஆசைகளை எல்லாம் கொட்டித் தீர்க்க இடம் தேடும் மனதிற்கு ஒரு புகலிடமாய் செவி சாய்த்தாள். கதை சொல்லும் பெரியோருக்கு ஆனந்தம், ‘ம்’ கொட்டும் குழந்தைகளின் ஆழ்ந்த கவனத்தில் இருப்பது போல, எனக்கு அவளது அவதானித்தல் பிடித்திருந்தது. அவ்வப்போழ்து, தனது பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டாலும், வரையறுத்த எல்லை என, ஒரு மெல்லிய கோடு எங்கள் நட்பை பக்குவப்படுத்தியது.


பட்டம் முடித்தவுடன், முதுகலை என்று முதலில் விண்ணப்பித்தவள் அவள் தான். படித்த படிப்பிற்கு, தகுதியான வேலை கிடைத்திருக்கலாம். அவளது குடும்பத்திற்கு வேலைக்கு அனுப்புவதில் ஈடுபாடு இல்லை. காலாகாலத்தில் கால் கட்டு போட்டு ஒரு நல்ல குடும்பத்தில் கரை சேர்த்தி விட்டு விட வேண்டும். இவளுக்கோ, அந்த கட்டை முடிந்த வரையில் தள்ளிப் போட வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகள் மாதம் ஓரிரு வீதமென ‘ம்’ கொட்டின எங்கள் அலைபேசிகள்.

ஒரு நாள் அழைத்தாள். பயம் கலந்த பூரிப்புடன் தனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக அறிவித்தாள். மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பம் பற்றிய அவளது விருப்பங்களைக் கேட்டறிந்து, வாழ்த்துரைத்தேன். முன்பில்லாத தயக்கத்துடனே அழைப்பதும், அவளும் நேரமறிந்து பதிலளிப்பதுமாய் கடந்தன சில வாரங்கள். ஒரு நாள் வாய் விட்டு சொல்லி விட்டாள்: ‘முன்பு போல் உன்னிடம் அடிக்கடி பேச முடியாது. புரிஞ்சுக்கோ’. புரிந்த இடைவெளியில் பயணிக்கும் நட்பிற்கும் இட்டதோர் முற்றுப்புள்ளி.

இன்று, அவள் அழைப்பாளா?


Friday, 12 February 2016

நீயும் நானும்



நான் இலக்கணவாதி;
நீ புதுக்கவிதை.

நான் மழைக் காதலன்
நீ வெயிலைப் பருகுபவன்.

நான் நீர் போல் எதையும் ஏற்றுக் கலங்குபவன்
நீ தீ போல் தீயன எரித்துத் தெளிபவன்.

நான் ஒளியோடு சேர்த்து நிழலையும் விளக்குபவன்
நீயோ பனித்துளியில் பனையின் உருவத்தை அடக்குபவன்

நான் நுனிப்புல் மேய்ந்து விட்டுப் பிளிறுபவன்
நீ மௌனப் பார்வையால் அகம் அவிழ்த்துப் பார்ப்பவன்.

ஒலியை மடக்கெனப் பருகி மயங்கிக் கிடந்தவனை
வரிகளின் சுவையில் இசையை மென்று விழுங்க வைத்தாய்.

புலர்ந்து சாயும் பொழுதொடு சுருங்கிய கண்களுக்கு
இரவின்  வண்ணங்களை அள்ளித் தெளித்தவன் நீ. 

நான் கண்ணாடி
நீ கலைடாஸ்கோப்

And I always wanted one for myself.




நன்றி: 
Playing Mirror - ஆனந்த்
புகைப்படம் எடுத்தமைக்கு: கார்த்திகாயினி
முயன்றமைக்கு: ஸ்ரீதர், ரேவதி 

Sunday, 24 January 2016

போஹா அந்தாதி

போஹா (Poha, पोहा) - வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள், வேர்க்கடலை போட்டு தாளித்த அவல் தான் போஹா. அதி விரைவாக தயாரிக்கக் கூடியது. சூடு ஆறுவதற்கு முன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால், சுவையற்றுப் போய் வேண்டா வெறுப்புடன் விழுங்க வேண்டி இருக்கும். A bland one.
தினமும் நாவாற வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிக் கொண்டவனுக்கு, இந்த போஹா முதலில் வெற்றுச் சுவையாகவே இருந்தது. ஆனால், சூடான சுவைக்காகவே, அலுவலக வாகனத்திற்கு காத்திருக்கும் ஐந்து நிமிட வேளையில், தினமும் போஹா சாப்பிடும் பழக்கம் தொற்றிக் கொண்டது.
சிறு வயதில், ஏன் இன்றும் கூட, வீட்டில் இருக்கும் போது மாலை வேளையில், “மதியம் என்ன கொஞ்சூண்டு சோறு தான சாப்பிட்ட! இந்தா ஒரு வாய் இத சாப்பிடு...என்று ஏதாவது தின்னக் கொடுப்பாள் அம்மா. காலை சுட்டு மீந்து போன இட்லியின் உதிரி உப்புமாவாகவோ, மதியம் செய்த கீரை கடைசலாகவோ, வெங்காயம் போட்டுப் பிணைந்த கோதுமை மாவு ரொட்டியாகவோ இருத்தல் பிடித்தம். சில மாலை வேளைகளில், பத்து நிமிடம் பாலில் ஊற வைத்த இரு பிடி அவலில், சர்க்கரை சேர்த்து, சிறிது சிறிதாய் நறுக்கிய தேங்காயை மேலாகத் தூவி, ஸ்பூன் போட்டுக் கொடுப்பாள் அம்மா. போக்கேமான் முடித்து, பே-ப்ளேட் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு, அது எவ்வளவு சீக்கிரம் உள்ளே போகிறதென்பதே தெரியாது.
பயணம், வேலை, பயணம், களைப்பு, தூக்கம் என்று ஒரே மாதிரி சுழன்று வந்தது பூனே வாழ்க்கை. இந்த *வருடம் ஏதாவது விநோதமாய் தீர்மானம் எடுத்துக் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று தோன்றியது. Resolution – தீர்மானம் என்ற பெயரில் புத்தாண்டு அன்று வலைதளங்களில் கீச்சிக் கூச்சல் போட்டு லைக்ஸ்வாங்க அலையும் கூட்டத்தின் நடுவே நாமும் பண்ணிப் பார்த்தால் என்ன என்ற ஊக்கம் கிடைத்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
*இலக்கு ஒன்றை முடிவு செய்வதற்குள் ஏப்ரல் மாதம் வந்து விட்டது தனி கதை.
திரைப்படம் பார்ப்பதும் வெளியே சாப்பிடுவதும் மட்டுமே எனக்கான பொழுதுபோக்கு என்றாகி விட்ட பிறகு, வேறென்ன சவாலை எனக்கு நானே ஏற்றுக் கொள்வேன்?


52 வாரங்களில் 52 ‘திரைப்படங்கள் பார்க்க வேண்டும். வெகு விநோதமாய்த் தோன்றா விட்டாலும், கொஞ்சம் கடினமானது தான் என்று நாளடைவில் புரிந்து கொண்டேன்.
நான் வாழும் பகுதியில், தனித் திரைகள் கொண்ட அரங்குகள் வழக்கொழிந்து விட்டன. வார விடுப்பு வியாழக்கிழமை என்று ஆன பிறகு, கூட்டமில்லா ‘Mall’-களில் திரைப்படங்கள் பார்க்க வேண்டும். புரியாத மொழி பேசும் மக்களிடையே, இடமாறு தோற்றப்பிழையுடன்  மத்லப்பிக் கொண்டே உழைத்துக்(!) கொண்டிருக்கும் என்னைப் போன்றவனுக்கும், நம்புங்கள், கடினமாகத் தான் இருந்தது.
வாராவாரம் ஒன்று என்று வரையறுத்துக் கொள்ளவில்லை. மொத்தக் கணக்கு 52 வர வேண்டும். அவ்வளவு தான். போன வாரம் விட்டுப் போச்சே என்றோ, அடுத்த வாரம் கம்பெனியில் வேலை நெருக்கடியில் விடுப்பே கொடுக்க மாட்டார்கள் என்றோ, Back to back இரண்டு படங்கள் பார்த்த அனுபவங்களும் அடக்கம்.
துணையில்லாமல் எப்படி செல்வது என்று முடங்கிக் கிடைக்கவில்லை.
விடுப்பு அன்றும் அது ஒரு தினசரிக் கடமைப் போல எழுந்து, என்ன படம் பார்க்கலாம் என்று திட்டமிடுவது.
  பார்க்க வேண்டும் என்பது, பார்த்தே தீர வேண்டும் என்று மாறி, அச்சச்சோ இன்று விடுப்பு அன்றும் வேலை செய்யச் சொல்கிறார்களே, கணக்கில் ஒண்ணு போச்சே என்று அலறும் அளவுக்கு இந்தத் தீர்மானம் ஆட்கொண்டு விட்டது.
திரைப்படம் பார்ப்பது ஓர் அனுபவம். எஸ். ராமகிருஷ்ணன் எழுத்தைப் படித்தது போல, இரண்டு நாட்கள் அந்த உணர்விலேயே மூழ்கிப் போகும் அளவிற்குஎல்லாப் படங்களும் அமைந்து விடுவதில்லை. பார்த்த கதைகளையே புது சுவையுடன் தந்தவை, கிராமத்து வாசனை விலக்காமல் கடைந்தெடுத்த காதல் களம், மேலை நாட்டுக் களத்தை அடிப்படையாய்க் கொண்டு நமது வீட்டு மசாலா சேர்த்துப் பரிமாறியவை, நறுக் நறுக்கென்று திருப்புதல்களுடன் இளம் இயக்குனர்களின் படைப்பு... என மாலை உணவு போலவே நான் பார்த்த ஒவ்வொரு திரைப்படமும். இப்படித் திரைப்படம் பார்ப்பதும் ஏதோ தினமும் அலுவலகம் செல்வது போல் ஆகி விட்டது.
 தினசரி வாடிக்கையாளராகி விட்ட கடையில், இன்று போஹா ஆறிப் போயிருந்தது. ஆனால், பழகி விட்ட காரணத்திற்காகவே ஆறிப் போன, சுவையற்ற போஹாவை சாப்பிட்டு விட்டுத் தான் ஏறினேன் அலுவலகப் பேருந்தில்.

## இதுவரை பார்த்திருக்கும் 42இல் நினைவில் நிற்பவை:

ஓ காதல் கண்மணி, Inside Out, தனி ஒருவன்,  In the heart of the sea, The Martian, Point Break, சார்லி (மலையாளம்)

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...