Tuesday, 17 December 2013

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் .
மிதமான மாலை ;
இதமான காற்று ,
மெலிதான சாரல் :
சிந்திய தேனை சுற்றி
மொய்த்திடும் ஈக்களைப் போல
ஷேர் ஆட்டோக்கள் சுற்றிவர ,
தொகுதிமேம்பாட்டு நிதியின் பிச்சை கேட்டு
அரைநிர்வாணமாய் நிற்கும் குண்டுகுழி சாலையில்
பல்லவன் விசிறும் சேற்றிற்கு தப்பித்து
அடைக்கலம் நாடி ஓடினோர்  மத்தியில் ,

ஆனந்தக் களிப்பில் ஆடும் பதுமையாய் ,
ஆர்ப்பரித்தாள் கண்களை !
சத் .. சத் .. என சொட்டும் மழை நீரில்
‘ ஜல் ஜல் ’ தாளமிடும் கால் ஜதிக்கு ,
அபிநயம் காட்டும் V-கட் கூந்தல் ;
பூரிப்பில் சுருங்கி விரிந்த முக வரிகள்
பசுமையும் செழுமையும் சேர்த்தொழுகிய தேகம்
பார்வையில் தணியாத தாகம் !

அவளை  ரசித்துக் கொண்டே
காற்றில் பறந்த மேகங்கள்
ஒன்றோடொன்று மோதி முழங்கின
 பேரிடியாய் அவள் வரவை

பார்வையில் பட்டவுடன் ஓடி வந்தாள் ;
ஆசையோடு தன் அருகே வரவழைத்தாள் ,
குளிர் தந்த குதூகலமோ :
என்னை கையோடு  அணைத்தாள் ...
என் வாயோடு இதழ் பதித்தாள் ...
அவள் எச்சில் ஈரத்தில் – என்
வெப்பம் ஆவியாகிப் போனதே ,
என்னை ரசித்து ரசித்து  
 அவள் குளிர் காய்கிறாளோ !

என்னை நனைய விட்டு
கொட்டும் மழையின் ஒரு
சொட்டை பருக வைத்தாள்
ஆ ! அலாதி மழையின் சுவை !!

சட்டெனப் பிரிந்தாள் காசை திணித்து
என் மன/ணம் திருடிக் கொண்டு .
மறுமுறை ஒன்றில்லாவிட்டாலும் 
அவள் சுவை மறவேன் நான்
பிறிதொரு மழையில் சந்திக்கும் வரை !

இப்படிக்கு,
ஒரு காபிக் குவளை,
சாலையோர கடை.










Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...